விராட் கோலியை சீண்டினால், அது அவரை சிறந்த வீரராக மாற்றிவிடும்: வார்னர் சொல்கிறார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தயாராகி கொண்டிருக்கிறார்கள். எங்கள் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், நாங்கள் ஸ்லெட்ஜிங் செய்வதிலும் ஈடுபடுவோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

ஸ்லெட்ஜிங் செய்வதில் டேவிட் வார்னர் முக்கியமானவர். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரராக வார்னர், எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபடுவதில் வல்லவர். பயிற்சி ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசிய இந்திய ஏ அணிக்கெதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் உள்பட இரண்டு வீரர்களிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

23-ந்தேதி தொடங்கும் இந்தியாவிற்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்யும் திட்டம் ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘எங்களுடைய எண்ணம் எல்லாம், ஆடுகளத்தில் களமிறங்கி, எங்களுடைய சிறந்த பிராண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவ்வளவுதான். அவரை சீண்டினால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதற்கும்மேலும் அதிக அளவில் ஸ்லெட்ஜிங் செய்தால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தற்போதைய சூழ்நிலையில் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அதேவேளையில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

ஸ்லெட்ஜிங் மற்றும் வெறுப்பேற்றும் நோக்கத்துடன் வெறும்பொழுது போக்ககு எண்ணத்துடன் நாங்கள் களம் இறங்கபோவதில்லை. அது சிறந்த கிரிக்கெட் விளையாட்டு, சிறந்த பிராண்ட் கிரிக்கெட்டை வெளிக்கொண்டு வருவதுடன், கிரிக்கெட்டிற்கான மெய்கருத்தையும் நிச்சயமாக உருவாக்கும் வகையில் விளையாடுவோம்’’ என்றார்.