கருணாவின் பாதுகாப்பு கருதி பிணை நிபந்தனை தளர்வு!!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை நிபந்தனையை தளர்த்துவதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணமாக கருணா மாதம்தோறும் ஒருமுறை பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாக கூடிய வகையில் பிணை நிபந்தனையை தளர்த்துமாறு அவரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

குறித்த உத்தரவை தளர்த்தி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை முன்னிலையாக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார பிணை நிபந்தனையை தளர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலததில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.