ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றிய பின்னர் மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன. எனினும் மெரீனா கடற்கரையில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.
நடிகர் லாரன்ஸ், சீமான் ஆகியோர் சமாதானம் செய்தும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. நீதிபதி ஹரி பரந்தாமன் அவசர சட்டம் பற்றி விளக்கம் அளித்து விட்டு சென்ற பின்னர் கூடியிருந்த மாணவர்களில் பாதி பேர் நீதிபதியின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டன்ர். அதனால் அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு செல்லலாம் எனக் கூறினர்.
ஆனால் ஒரு தரப்பினரோ இது மாநில அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம். மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் இதற்கு எதிரான இன்னொரு சட்டத்தை கொண்டு வரலாம். காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை இன்னும் இவர்கள் நீக்கவில்லை. மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராக தடை எதுவும் இன்னும் விதிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது நாம் பாதியிலேயே கலைந்து செல்வது போராட்டம் தோல்வியில் முடிந்தது போல் ஆகிவிடும். என கூறி தொடர்ந்து கடற்கரை அருகிலேயே இருந்தனர்.
மீனவர்கள் ஆதரவு
மாணவர்கள் மீண்டும் கடற்கரையை நோக்கி வரத் தொடங்கினர். ஆனால் இதை கவனித்த காவல்துறையினர் கடற்கரையை நோக்கி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் மீனவர்கள் படகுகள் மூலமாக போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க உள்ளே நுழைந்தனர். அந்த இரவு நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை விட மீனவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
3 கோரிக்கை என்னென்ன
ஒட்டுமொத்த போராட்டக் குழு சார்பாக அரசுக்கு 3 கோரிக்கைகள் வைக்கிறோம். எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஜல்லிக்கட்டுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை 9வது பிரிவில் சேர்க்க முதல்வர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தடியடி நடத்திய காவல்துறையினர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களின் உறுதுணை
மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜான் கார்த்திக், சில ஊடகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர் என்று செய்திகள் வருகிறது. நாங்கள் மீனவ மக்களின் உறுதுணையோடு மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்
எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. போராட்டக் குழு சார்பாக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சில கோரிக்கைகளை வைக்கிறோம். ஒட்டுமொத்த போராட்டக் குழு சார்பாக அரசுக்கு 3 கோரிக்கைகள் வைக்கிறோம். எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
அரசு வேலை
முதலாவதாக, இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வழக்கு போட்டிருந்தால் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இரண்டாவதாக, இந்த போராட்டத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.
9வது அட்டவணை
மூன்றாவதாக ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு இன்று செய்த சட்டத்திருத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும் முழுமையான சட்டத்திருத்தமாக படவில்லை. ஒரு சிலர் சரி என்று தெரிவித்தாலும், பெரும்பாலானோர் அதனை ஏற்கவில்லை. இந்த சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கையாகும். முதல்வர் இதற்கான அறிவிப்பை அறிவித்தால் அடுத்த 10 நிமிடத்தில் நாங்கள் கலைவோம். அதுவரைக்கும் எங்களது போராட்டம் தொடரும். நாங்கள் 8 நாள் கஷ்டப்பட்டோம். அதற்கு முதல்வர் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
7 நாள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. ஆனால் இன்று அவர்கள் செய்த காரியம் மிகப்பெரிய மனவருத்ததை அளிக்கிறது. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி விடிய விடிய இருளில் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று காலையில் ஏராளமான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போராட்டம் இப்போது 300 பேருடன் நீடித்து வருகிறது. அவர்கள் மாணவர்களா? வேறு யாரேனுமா? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.