ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தற்காலிகமானது!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்காலிகமானது என இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் உதய சிறி காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் வீதியில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உயர் மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கப்படாது.

இலங்கை இந்த நிலையை எட்டுவதற்கு மிகவும் அண்மித்த நிலையில் காணப்படுகின்றது.

இலங்கைக்கு தற்போது வரிச் சலுகை கிடைக்கப் பெற்றாலும் தனிநபர் தலா தேசிய வருமானம் 200 டொலர்களினால் உயர்வடைந்தால் இந்த சலுகைத் திட்டம் ரத்தாகிவிடும்.

4036 முதல் 12475 அமெரிக்க டொலர்கள் வரையில் தனிநபர் தலா தேசிய வருமானத்தைக் கொண்ட நாடுகளுடைய உயர் மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளின் வரிசையில் உள்ளடக்கப்படும். எமது தனிநபர் தலா தேசிய வருமானம் 3800 அமெரிக்க டொலர்களாகும்.

இன்னும் 200 டொலர்கள் வருமானம் உயர்த்தப்பட்டால் எமக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.

இந்த வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படும் மிகவும் தற்காலிக அடிப்படையிலானது.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மட்டுமல்ல.

பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக ஏற்றுமதி வருமானத்தை உயர்த்த முடியும்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது குறித்து உறுதியாக அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.