விஜய் சேதுபதி போல பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயார்: சக்தி வாசு!

பி.வாசு கன்னடத்தில் இயக்கி வெளியிட்ட ‘சிவலிங்கா’ படம் தற்போது தமிழில் தயாராகி இருக்கிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இதில் சக்தி வாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘சிவலிங்கா’ படம் குறித்து நடிகர் சக்திவாசு கூறுகையில் ‘‘எனது அப்பா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான ‘சிவலிங்கா’ படம் அங்கு 150 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நான் அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தேன்.

இப்போது தமிழில் உருவாகும் ‘சிவலிங்கா’ படத்திலும் ஏற்கனவே நடித்த அதே பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நாயகனாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் கன்னடப் படத்தை பார்த்தார். அப்போது அதில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கு தமிழில் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எனது வேடம் இதில் பலமாக அமைந்திருக்கிறது.

‘சந்திரமுகி’ படத்தை கன்னடத்தில் இருந்து தமிழில் எடுக்கும்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுபோல இந்த படத்தையும் 3 மடங்கு மாற்றி இருக்கிறார்கள். கதை விவாதத்தின் போது நானும் பங்கேற்றேன். அந்த படத்தில் கன்னடம் பேசி நடித்தேன். இப்போது, எனக்கு தெரிந்த தமிழ்பேசி உற்சாகமாக நடித்து இருக்கிறேன்.

இதில் நான் புறா வளர்ப்பவர் கதைப்படி முஸ்லிம் ஆக வருகிறேன். இதற்காக டப்பிங்கிலும் உருது பேசி இருக்கிறேன். ராகவா லாரன்சுடன் சில காட்சிகளில் நடித்துள்ளேன். அப்பா டைரக்டர். அவர் சொன்னபடி நடிக்கும் போது எனக்குள் ஒரு வித பயம் இருந்தது. அவர் யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். நான் நன்றாக நடித்திருப்பதாக அப்பா பாராட்டிய போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

அதன் பிறகு வேறு படங்களில் நடிப்பேன். விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா போன்றவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் சேர்ந்து நடிக்கிறார்கள். நானும் நல்ல வேடம் என்றால் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.