முதல் டெஸ்ட்: 206 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா!

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போர்ட் எலிபெத்தில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 205 ரன்னில் சுருண்டது. 81 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 406 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 488 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

488 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 58 ரன்னுடனும், டி சில்வா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கை அணியின் வெற்றிக்கு 248 ரன்கள் தேவை. கைவசம் ஐந்து விக்கெட்டுக்கள் இருந்தன. இதனால் இலங்கை அணி நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மேத்யூஸ் மேலும் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்னுடன் வெளியேறினார். டி சில்வா 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். சமீரா ரன் எதுவும் எடுக்காமலும். பிரதீப் 4 ரன்னிலும் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 281 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் 59 ரன்னும், 2-வது இன்னிங்சில் 117 ரன்களும் குவித்த ஸ்டீபன் குக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.