ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 443 ரன் குவித்தது. அசார் அலி இரட்டை சதம் (205 ரன்) அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை  விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 465 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் சுமித் 100 ரன்னும், ஸ்டார்க் 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 624 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. சுமித் 165 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சோகைல்கான், யாசிர் ஷா தலா 3 விக்கெட்டும், வகாப் ரியாஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து 181 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 89 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. சமி அஸ்லம் (2 ரன்) ஹாசல்வுட் பந்திலும், பாபர் ஆசாம் (3 ரன்), மற்றும் ஸ்டார்க் ஆட்டம் இழந்தனர். லயன் பந்தில் யூனுஸ்கான் (24), கேப்டன் மிஸ்பா (0), ஆசாத் சபீக் (16) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

இப்படியே போனால் இன்னிங்ஸ் தோல்வி நிச்சயம் என்ற நிலையில், இந்த மோசமான தோல்வியை தவிர்க்க அசார் அலி, சர்பிராஸ் அகமது இருவரும் போராடினர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர்கள் தலா 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, பாகிஸ்தான் அணி 163 ரன்களில் சுருண்டது.

இதனால், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுமித் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.