சசிகலா தலைவராக திணிக்கப்பட்டால் அதிமுக என்னவாகும்? துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு!

அதிமுகவின் தலைவராக சசிகலா திணிக்கப்பட்டால் அதிமுக உடையாது. அந்த கட்சி மெல்ல கரையும் என்று துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் இதை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், அதிமுகவில் தொண்டர்கள் ஒருபக்கம், தலைவர்கள் ஒருபக்கம் உள்ளனர்.

1972-ல் திமுக எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது அதிமுகவின் தற்போதைய நிலை. கருணாநிதியின் குடும்ப அதிகாரத்தை அப்போது எம்ஜிஆர் ஏற்கவில்லை. இதையடுத்து எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது எம்ஜிஆருக்கு பின்னர் தொண்டர்கள் திரண்டர். ஆனால் கருணாநிதியுடன் தலைவர்கள் இருந்தனர். இதேபோல் 1987-ம் ஆண்டு ஜெயலலிதா ஒருபக்கம், தலைவர்கள் ஒருபக்கம் நின்றனர்.

பின்னர் ஜெயலலிதாவை தொண்டர்கள் ஏற்றனர். தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் ஒரு தலைவர் தேடப்படுகிறார். அதற்காக ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவை தலைவராக தேடுவதை தொண்டர்கள் ஏற்கவில்லை.

நாள்தோறும் சசிகலாவை தலைவராக்க போயஸ் கார்டனில் எப்படி குவிகிறார்கள் என்பதை ஒரு பத்திரிகையாளனாக எனக்கு தெரியும்.

அதிமுகவில் மேலே இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை இருக்கிறது. இப்படி தொண்டர்களுக்கு பிடிக்காத தலைமையை திணித்தால் அதிமுக கரையும். அதிமுக உடையும் என்பதைவிட கரையும்.

அதாவது அதிமுக என்பது திமுகவை பிடிக்காத கட்சி. திமுகவை கடுமையாக எதிர்க்கும் கட்சி. அக்கட்சியின் தொண்டர்கள் திமுகவுக்கு எதிரான கட்சியில்தான் இணைவர்.

சசிகலா தலைமை ஏற்க கூடாது. தலைமையை உருவாக்குகிற பொறுப்பு அவருக்கு உள்ளது. அப்பொழுதான் அவரை தொண்டர்கள் நம்புவார்கள்.

சசிகலா ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவர் என்பதை ஏற்கமுடியாது. சசிகலாவை 2 முறை ஜெயலலிதா வெளியேற்றினார்.

சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் சிறைக்குள் போட்டார் ஜெயலலிதா. 1991-ல் இருந்து சசிகலா உறவினர்கள் ஆட்சியில் தலையிட்டார்கள் என்பதும் உண்மை.

அதிமுகவின் உட்கட்சியில் தலையிட்டால் பாஜகவுக்கு என்ன லாபம் இருக்கிறது. மற்ற கட்சிகள் நலிவதால் தங்கள் கட்சி வளரும் என பாஜக நம்பவில்லை.

மத்திய பாஜக அரசு ஓபிஎஸ்ஸை மட்டும் ஆதரிப்பதாக சொல்ல முடியாது. அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை பொது செயலாளராக ஏற்றுக்கொண்டால் அதை மத்திய அரசு தடுக்காது. இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்தார்.