தமிழினத்தின் உரிமைகள் விடயத்தில் அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது. உரிமை கிடைக்காத விடத்து தமிழன் வாழ முடியாது என்பதே பொருளாகும். எனவே தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்குள் வேறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகளை கொண்டிருக்கலாம்.அதற்காக தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும்.
வரப்போகின்ற அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றதா? என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானித்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவை.
நடைமுறைக்கு வர இருக்கின்ற சீர்திருத்த அரசியலமைப்பு என்பது தமிழ்த் தரப்பின் ஆதரவோடு வெளிவருவது என்ற அங்கீகாரத்துக்குட்பட்டது. இது முன்னைய அரசியலமைப்புக்கு இருக்காத அங்கீகாரத்தைக் கொடுப்பதாக அமையும்.
எனவே சீர்திருத்தப்பட்ட அரசியலமைப்பு அமுலுக்கு வந்த பின்னர், அது தொடர்பில் குறை கூறுவதோ! அன்றி பிழை காண்பதோ! நியாயப்பாடானதாக இருக்காது.
தவிர நாமும் சேர்ந்து தயாரித்த அரசியலமைப்பை பின்னணியில் குறைகூறுவது ஏற்புடையதல்ல என்பது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கும்.
ஆகையால் வருகின்ற அரசியலமைப்புத் தொடர்பில் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் தரப்புக்களின் தலையாய கடமையாகும்.
இதேவேளை பெரும்பான்மை இன மக்கள் எதிர்ப்பார்கள், அதனால் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அரங்கேறாமல் போகும் என்றெல்லாம் பயம் கொள்வது வெறும் நடிப்பேயன்றி அதில் வேறு எந்த அர்த்தமும் இருக்க முடியாது.
ஏனெனில் இந்த நாட்டில் இதுகாறும் நடைபெற்று வருவது தமிழ் மக்களுக்கான உரிமை மறுப்பு. அந்த உரிமை மறுப்பை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.அப்போராட்டம் சர்வதேச ஆதரவுடன் நசுக்கப்பட்டது.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தை முடிவுறுத்தியதென்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று எவர் நினைத்தாலும் அது இந்த நாட்டுக்கே கேடாகும்.
ஏனெனில் தமிழ் மக்களின் போராட்டத்தை தோற்கடித்தது என்பதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் வேறுபட்ட திசைகளில் பயணிக்கக்கூடிய கோடுகள்.
ஆக, தமிழ் மக்களின் போராட்டத்தை முடிவுறுத்துவதென்பதில் ஒரு தரப்பு வெற்றி என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது.
ஆகையால் வெளிவரப் போகின்ற அரசியலமைப்பில் சிங்கள மக்கள் என்ன நினைப்பார்கள், அவர்கள் எதிர்ப்பார்களா? என்ற கேள்விகளுக்கு அறவே இடமிருக்க முடியாது.
மாறாக இந்த நாட்டில் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சம உரிமையோடு, சம அதிகாரத்தோடு வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.இதுவே முதன்மையானது.
இந்த உண்மையை ஆட்சியாளர்களிடம் எடுத்துரைத்து வலியுறுத்த வேண்டியவர்கள் தமிழ் அரசியல் தரப்பினர்.
ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஏதேனும் நடப்பதாகத் தெரியவில்லை. ஏதோ அரசியலமைப்பு சீர்திருத்தம் வெளிவந்தால் போதும் என்ற எண்ணத்துடன் தமிழ் அரசியல் தலைமை இருப்பது போன்றே நிலைமை தெரிகிறது.
இத்தகைய நிலைமை தமிழ் மக்களுக்கு பேராபத்து. அந்தப் பேராபத்து என்பது குறுகிய காலத்துடன் அறுபடப் போவதில்லை. காலாகாலமாக அதுவே அனுபவிப்பாக அமையும்.
எனவேதான் வருகின்ற சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்காகப் பயன்படுத்த தமிழ் அரசியல் தலைமைகளும் நம் புத்திஜீவிகளும் அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ஆராய்ந்து நமக்குச் சாதகமாக ஆக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் அந்தோ கதிதான்.