அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை தேசிய நல்லிணக்க வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நீதியமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவித்து இன்று(22) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரருடன் விஜயம் செய்த நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒரு விசேட சந்திப்பை நடத்தினார். அந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பட்டியே சுமனரத்ன தேரரின் அநாகரிகமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவருடைய நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்பட்டதுடன் அவ்வாறான நடவடிக்கைகளில் தேரர் ஈடுபடக்கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டது. அவற்றை ஏற்றுக் கொண்ட அமைச்சர் பொதுபலசேனாவின் செயலாளரையும் மட்டக்களப்பு விகாராதிபதியையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகவியலாளருடன் பேசிய அமைச்சர், “மட்டக்களப்பில் சிங்கள மக்கள் குறித்து குரல் கொடுப்பதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். பௌத்த பிக்குமார்கள் இன மற்றும் மத ரீதியில் செயற்படுவதால்தான் பிரச்சினைகள் ஏற்படுவதாக ஒருவித வதந்தியை மட்டக்களப்பில் உள்ளவர்கள் ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபலசேனா எவ்வாறு செயற்பட்டது என்பதும் இப்பொழுது எவ்வாறு செயற்பட்டு வருகிறார்கள் என்பதும் அமைச்சருக்குத் தெரியாத விடயம் அல்ல. இனவாதக் கண்ணோட்டத்துடன் ஏனைய மதங்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருவதை இன்றும் கூட காணக் கூடியதாக இருக்கின்றது.
அதே போல்தான் மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரரும் கூட சிங்களத்தில் இருக்கக் கூடிய மிகவும் அநாகரிக வார்த்தைகளைத் தெரிவு செய்து தமிழ் மக்களையும் அரச அதிகாரிகளையும் திட்டித் தீர்த்ததை இன்றும் நாங்கள் சமூக வலைத் தளங்களில் காண முடியும். இவ்வாறானவர்களை சிங்கள மக்களின் குரலாக ஏற்றுக் கொள்வதும் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்று சான்றிதழ் கொடுப்பதும் குறித்த அமைச்சர் எந்த அளவிற்கு சிங்கள, பௌத்த தீவிரவாதத்துடன் இணங்கிப் போகிறார் என்பதையே காட்டுகிறது.
நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் அதிகாரத்தைக் கொண்டிருக்கக் கூடிய ஒருவர் நீதியை முழுமையாகக் கைவிட்டு இனவாதிகளான பௌத்த பிக்குமாரைக் காப்பாற்றும் வகையில் செயற்படுவதானது ஏனைய இனங்களையும் மதங்களையும் மலினப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
ஓர் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் நீதியமைச்சரின் கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏனைய தேசிய இனங்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களையும் அச்சவுணர்வுகளையுமே உருவாக்குகின்றது. இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் அமைச்சர்கள் இவ்வாறாக பக்கச் சார்பாக நடந்து கொள்வதானது நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு வழி சமைக்காது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.