மத்தள சர்வதேச விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கெண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த விமான நிலையத்தில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமையினால் அரசாங்கம் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்கு ஒரு நெடுஞ்சாலை கட்ட வேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் அரசாங்கம் கடன்களுக்கு வட்டி போன்று ரூபா 3.6 மில்லியன் செலுத்தி வருகின்றது என சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்று பங்குதாரர்களை தேடும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.
மத்தள சர்வதேச விமான நிலையம் உலகின் வெறுமையான விமான நிலையம் என்றே கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.