ரஷிய தூதரை கொன்றவன் துருக்கி அதிபருக்கு 8 தடவை பாதுகாப்புக்கு சென்றவன்!

துருக்கி நாட்டின் ரஷிய தூதர் ஆந்த்ரேகர்லோவ் 2 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அங்காராவில் உள்ள கண்காட்சி கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது துருக்கி போலீஸ்காரர் மெவ்லுட்மெர்ட் என்பவர் அவரை சுட்டுக்கொன்றார்.

அங்கிருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக மெவ்லுட்மெர்ட்டை சுட்டு வீழ்த்தினார்கள். மெவ்லுட்மெர்ட் தூதரை கொன்றதும் இவரை ஏன் கொன்றேன் என்பது பற்றி கூச்சல் போட்டு கூறினான். அலப்போ நகரில் சிரியா அரசு படைகளும் ரஷிய படைகளும் சேர்ந்து நடத்தும் தாக்குதலை கண்டித்து ரஷிய தூதரை கொன்றதாக அவன் தெரிவித்தான். துருக்கி அரசுக்கு எதிராகவும் அவன் கோ‌ஷமிட்டான்.

இதன்படி பார்த்தால் துருக்கி அதிபர் மீதும் அவன் கோபத்தில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. துருக்கி அதிபர் தய்யீப் எர்டோஹனின் பாதுகாப்புக்கு மெவ்லுட்மெர்ட் 8 தடவை சென்றிருக்கிறான். அதிபர் மீது கோபத்தில் இருந்த அவன் அதிபரை சுடாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.

மெவ்லுட்மெர்ட் அங்காராவில் கலவர தடுப்பு போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக 2½ ஆண்டுகள் இருந்து வந்தான். இந்த நேரத்தில் 8 தடவை அதிபருக்கு பாதுகாப்புக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.