மக்களை வெளியேற்ற அலெப்பே நகருக்குள் படையெடுக்கும் பேருந்துகள்!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த ஆறாண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான சண்டை நடந்து வந்தது. நகரின் பெரும்பான்மையான பகுதிகளை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் மீட்டு விட்டன.

இதற்கிடையே அலெப்போவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் செய்வதற்காக துருக்கியும், ரஷியாவும் முயற்சி மேற்கொண்டன.

அதில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி கிழக்கு அலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களும், பொதுமக்களும் வெளியேறி, வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும்.

போரினால் காயம் அடைந்த மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக வெளியேற முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்கள் வெளியேறுவதற்காக 20 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், தயார் நிலையில் வைக்கப்பட்ட பேருந்துகள் அலெப்போ நகருக்குள் மக்களை வெளியேற்றுவதற்காக உள்ள நுழைந்துள்ளன.

அலெப்போ நகரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும் மேல் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டியின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.