சுவிஸில் குடியேற அடிப்படை விதிகள்: நடைமுறைக்கு புதிய சட்டம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் பணி ஒப்பந்தம் மூலமாக தங்கும் வெளிநாட்டினர்களுக்கு தற்போது B permit என்பப்படும் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனை 5 ஆண்டுகள் நீடித்துக்கொள்ளவும், பின்னர் C permit எனப்படும் நீண்ட கால குடியிருப்பு அனுமதியாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

எனினும், தற்போது இந்த உரிமைகளை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது, அடிப்படையில் சுவிஸில் குடியேறும் மற்றும் பணி ஒப்பந்தமாக தங்கும் வெளிநாட்டினர்கள் அவசியமாக சுவிஸ் தேசிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர், பொதுஇடங்களில் குடிமக்களுடன் மரியாதையுடனும் கணிவுடனும் பழக வேண்டும். சுவிஸ் தேசிய பாதுகாப்பையும் சமூக பழக்க வழக்கங்களை மதிப்பதுடன் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் பங்கேற்க வேண்டும்.

இதுபோன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வெளிநாட்டினர்களின் B permit உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், C permit உள்ளவர்களின் அனுமதியானது தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு மாற்றப்படும்.

இதுமட்டுமில்லாமல், சுவிஸில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் வெளிநாட்டினர்களும் இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் அவர்களுடைய அனுமதியும் பறிக்கப்படும் வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைப்பெற்ற பிறகு அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.