ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளும் கோத்தபாய!

ஜப்பான் வாழ் இலங்கையர்களின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இவர்கள் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கோதபாயவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நிரோசன் பிரேமசந்திர ஆகியோர் ஜப்பான் விஜயம் செய்துள்ளனர்.

இன்றைய தினம் ஜப்பான் லங்கா ஜீ விஹாரையில் இலங்கைப் படைவீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வழிபாடுகளில் கோதபாய ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். ஜப்பான் நாட்டு ராஜதந்திரிகள் சிலருடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் 17 மற்றும் 18ம் திகதிகளில் இபராகீ, நகோயா ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள இரண்டு கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த கருத்தரங்குகளில் பேசப்பட உள்ளது.

18ம் திகதி இபாராகீ ஸ்ரீ சம்புத்த விஹாரையில் புத்தர் சிலை அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று கோதபாய தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.