அரசியல் மரணங்கள் – தமிழர்களின் பார்வையில்

திரையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்று ஒடுகிறது. பேட்டியின் முடிவில் முதலமைச்சர் கடுமையான முகத்துடன் வார்த்தைகளை கொட்டிவிட்டு மைக்கை கழட்டி எறிந்து விட்டு செல்கிறார். வீடியோவுக்கு வீர பெண்மணி, இந்தியாவின் இரும்பு பெண் என்றெல்லாம் தலைப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதையே விஜயகாந்த் செய்திருந்தால் பைத்தியக்காரன், குடிகாரன் என்றெல்லம் அடைமொழி கொடுத்து வறுத்தெடுத்திருப்பார்கள்.

ஒரு பெண்ணாக ஆணாதிக்கமிக்க சூழலில் ஒரு கட்சியை தலைமை தாங்கி முதலமைச்சர் ஆகியமையால் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்கின்றனர். சிறந்த பெண் தலைவர் என்கின்றனர். ஆனால் எல்லா சூழ்ச்சிகளையும் வீழ்த்தி மேல் எழுந்தவர் அதே சூழிச்சிகளையும் அடக்குமுறைகளையும் தனே செய்தார்.

மத்திய அரசுக்கெல்லாம் வளைந்து கொடுக்காதவர் தன்னுடைய சொந்த நலன் கருதியே உற்பத்தியான முடிவுகளை எடுத்தார். மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் மற்ற அரசியல்வாதிகளை போல் சித்து விளையாட்டுதான் அதிகமாக இருந்தது.

 

மரணித்தவர் பற்றி இவை எல்லாம் இனி எதற்கு என்று கேட்கிறார்கள். சாதாரண மனிதர்கள் இறப்பை போல ஓர் அரசியல்வாதியின் மரணம் இருப்பதில்லை. ஐக்கிய ராச்சியத்தின் முன்னாள் பிரதம மந்திரி மார்க்ரெட் தாட்சர் இறந்த போது வெடி கொளுத்தி கொண்டாடிய மக்களும் உள்ளார்கள். மரணம் செய்த பிழைகளுக்கு தண்டனையாகவோ, மன்னிப்பாகவோ அமையாது.

ஹிட்லர் இழைத்த கொடுமைகளை அவரது வீரம் என புகழ முடியுமா? ஈழ தமிழருக்கோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முகமாக ஒரு போதும் செயற்பட்டது இல்லை. தனது அதிகாரத்தை கொண்டு எல்லோரையும் அடிபணிய வைப்பது எவ்வாறு சிறந்த தலைமைத்துவம் ஆகும்.?

ஈழ தமிழருக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் போன்ற சில காரணங்களை கூறி கொண்டு புலம் பெயர் தேசங்களில் ஈழ தமிழர் உள்ள அமைப்புகள் அஞ்சலி கூட்டம் நடத்துகின்றன. போகிற போக்கில் மகிந்த ராஜபக்ச இறந்தால் அவருக்கும் அஞ்சலி கூட்டம் வைப்பார்கள் போலுள்ளது. அமெரிக்க – இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். நல்ல அதிவேக பாதைகளை அமைத்தவர். போதாதற்கு தமிழ் தலைமைகளை காட்டிலும் தற்போது தமிழ் மக்களின் நலன் சார்ந்து அதிகம் கதைப்பவர் அவர்தான். இவ்வளவும் போதாதா அஞ்சலி கூட்டம் நடத்துவற்கு. அதை யார் நடத்துவது என்பதிலும் அமைப்புகளிடையே பெரும் போட்டி நிலவலாம். இவ்வாறு தான் இருக்கின்றது இன்றைய புலம்பெயர்த்த தமிழ் அமைப்புகளின் அரசியல்.

ஈழ விடுதலை போராட்டத்தையும் போராளிகளையும் எவ்வாறு கருத்து கூறினார் என்று தெரியாத? தடாவும் பொடாவும் ஈழ ஆதரவாளர்கள் மீது எவ்வாறு பிரயோகிப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் 2009 ற்கு பின்னர் இவர் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மற்றம் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலே காரணம். முள்ளிவாய்க்கால் கொடுமைகளின் வெம்மையால் ஏற்பட்ட தி.மு.க – காங்கிரஸ் வெறுப்பும், தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் தனக்கு சார்பாக பயன்படுத்தினர் இவர்.

ஈழ மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டவராக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இருத்தல் வேண்டும். ஈழ அகதிகளை சக மனிதர்களாக கூட நடத்தாமல் மிக மோசமான நிலையில் அடைத்து வைத்திருக்கும் இவ் ஆளும் கட்சியின் தலைமையின் மறைவுக்கு அஞ்சலி கூட்டம் நடத்துகின்றார்கள் தமிழ் அமைப்புகள்.

தமிழீழம் அடைத்தலை நோக்காக கொண்டு செயற்படும் புலம் பெயர் அமைப்புகள் எங்குமே ஈழ அகதிகளின் பிரச்னைகளை கருத்தில் கொள்வதில்லை என்பது புலனாகிறது. எழுவர் விடுதலை, காவேரி தண்ணீர் பிரச்னை, ஜல்லிக்கட்டு தடை ஆகிய பிரச்னைகளில் மக்கள் சார்ந்து மத்திய அரசை எதிர்த்து முடிவுகளை எடுத்திருந்தால் கூட உங்கள் அடை மொழிகளில் சற்றேனும் உண்மையிருக்கலாம். தன் நலம் சார்ந்து மேல் தட்டு வர்க்கம் சார்த்த நலன் சார்ந்தும் செயற்பட்ட ஒருவருக்கு வீண் அடைமொழிகளை கொடுத்து வரலாற்று திரிபுகளை உண்டாக்காதீர்கள்.

 

இறத்தவருக்கான அஞ்சலி கூட்டங்கள் நடத்துவது ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் இறந்தவர்களின் அரசியல் நிலைப்பாடு சார்ந்து மக்களிடம் தவறான புரிதலை தூண்டாதீர்கள். துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமியின் கருத்துக்களையும் எழுத்துக்களையும் மிகுந்த நகைசுவை பண்பு கொண்டவையாக கடந்து போகமுடியாது.

நகைசுவை என்கிற பெயரில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் தமிழ் காட்சி ஊடாகங்களை மக்கள் ஒரு களியாட்ட உணர்வுடன் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதே போல் எள்ளல் துள்ளலாக சோ கக்கிய பார்ப்பனிய அரசியலை ஓர் தேர்ந்த ஜனரஞ்சக பத்திரிகையாளன் என்று அடையாள படுத்தமுடியாது.

இவ்வாறான அரசியல் தான் இன்று டொனால்ட் டிரம்ப் புடனும் லோபி பண்ணி பார்க்கலாம் என்ற நிலைக்கு வழியமைத்துள்ளது. மரணித்தவரின் அஞ்சலி கூட்டங்கள் அவர்களுடைய அரசியலை பேசாது வீண் புகழ் பாடுவதாய் அமைவது அமைப்புகளின் அரசியல் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.