மாதத்தில் ஒருதடவை மட்டும் குளிக்கும் அமைச்சர்! சபையில் சிரிப்பு

ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அமைச்சரின் பெயரைக் கூறாமலேயே, தனதுரையை நிறைவு செய்துகொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில், மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனும், உரையாற்றினார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவையிலிருந்து விவாதத்தை அவதானித்துக் கொண்டிருந்தார்.

உரையைத் தொடர்ந்த சார்ள்ஸ் எம்.பி,

ஜனாதிபதி அவர்களே! மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்கப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படாது, அழிவடைந்து செல்கின்றன. இவற்றைப் புனரமைக்குமாறு, எத்தனையோ முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

ஆனால், அமைச்சர் ஒருவர், மன்னார் – தாராபுரம் குளத்தை, 150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைத்து விட்டு, ஒரு மாதத்தில் அதுவும் ஒரு தடவை மட்டுமே, அக்குளத்தில் குளிக்கின்றார்” என்றார்.

அப்போது எழுந்த நீர்ப்பாசன மற்றும் நீரகவள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, “ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சர் யார் என்பதை அறிவதற்கு, நான் ஆவலாக இருக்கின்றேன்.

ஏனெனில், நான் கைகளால் தண்ணீரை அள்ளித்தான் குளிப்பேன். 150 மில்லியன் ரூபாய் செலவில் குளத்தைக் கட்டிக் நான் குளிக்கமாட்டேன்” என்றார்.

தனதுரையைத் தொடர்ந்த சார்ள்ஸ் எம்.பி, “அமைச்சரே, அது நீங்கள் அல்லர் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் தெரிவித்ததுடன், “அது வேறோர் அமைச்சர்” என்றும் குறிப்பிட்டார்.

சரி… சரி… ஒருமாதத்தில் அதுவும் ஒரேயொரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சர் யாரென்று கூறுங்களேன்?என்று, அமைச்சர் விஜித் விஜயமுனி கெஞ்சும் வகையில் கேட்டபோது, ஜனாதிபதியும் சிரித்துவிட்டார்.

அவையிலிருந்த இன்னும் சில அமைச்சர்களும் சிரித்துவிட்டனர்.

சிரிப்பை அடக்கிக்கொண்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, அது எமது மாவட்ட அமைச்சர் எனக்கூறி, உரையைத் தொடர்ந்தார்.