8 மணி நேரத்தில் பாட்டை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான். வைரமுத்து பெருமிதம்

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை கம்போஸ் செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வார் என்று கூறுவதுண்டு. அந்த பாடல் நன்றாக வரவேண்டும் என்ற மெனக்கிடல் அதில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை ரஹ்மான் எட்டு மணிநேரத்தில் கம்போஸ் செய்து ஒலிப்பதிவையும் முடித்துவிட்டாராம். இந்த தகவலை வைரமுத்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதோ வைரமுத்துவின் டுவீட்:

காற்று வெளியிடை படத்தின்
ஐந்தாம் பாடல் நேற்று நிறைவுற்றது.
மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு
தொழிற்படுவது ஒரு தனி சுகம்.

நேற்று மாலை 4 மணிக்குக் கூடினோம்;
6 மணிக்கு மெட்டு இறுதியானது;
8 மணிக்குப் பாட்டு உறுதியானது;
இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவு நிறைந்தது.

என்ன லயம்! என்ன நயம்!

பிரிவின் வலி சொல்லும் நினைவின் பாடல் அது.
ஒரு வரி சொல்லட்டுமா?

“அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்”