ஆக்ரோஷமாக தாக்கிய ஆடுகள்: படுகாயமடைந்த முதியவர் பரிதாப மரணம்

பிரான்சில் ஆக்ரோஷமான ஆடுகளின் கூட்டத்தில் சிக்கிய முதயவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Cestas என்ற கிராமப்பகுதியில், குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களால் நடைபாதை ஒன்றில் இருந்து உடலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட உடலில் முகம் சிதைந்து கால் முட்டுகள் பெயர்ந்து காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தை அடுத்து பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதனிடையே குறித்த 94 வயது முதியவரின் உடற்கூறு ஆய்வில் வெளியான தகவல் விசாரணை அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் ஆடுகளின் கூட்டத்தில் சிக்கியதால் அவை ஆக்ரோஷ்மாக தாக்கிய காரணத்தாலையே படுகாயமடைந்து பின்னர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆடுகள் குறித்த முதியவரை முட்டித்தள்ளியிருக்கலாம், பின்னர் தலை மற்றும் கொம்புகளால் அவகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம். முதுமை காரணமாக ஆக்ரோஷமாக தாக்கும் ஆடுகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள அவரால் முடியாமல் போயிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

குறித்த ஆடு முதியவரை மட்டுமல்ல உள்ளூர் அரசியல்வாதி ஒருவரையும் முட்டித்தள்ளி பதம் பார்த்துள்ளது. அவர் கை கால்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆட்டை பொலிசார் பிடித்து அதன் ஆக்ரோஷம் தணிப்பதற்கு ஏதும் மருத்துவ உதவியை நாட முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.