கமல், அஜித் இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்தாரா?

கமல் நடிப்பில் வெளிவந்த ‘உன்னைப்போல் ஒருவன்’, அஜித் நடிப்பில் வெளிவந்த ‘பில்லா -2’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டொலேட்டி. பிரம்மாண்டமாக உருவான இந்த இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால், சக்ரிக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்நிலையில், தற்போது நயன்தாராவுக்காக ஒரு புதிய கதை தயார் செய்து அவரிடம் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் சக்ரி. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வரும் நயன்தாராவுக்கு இப்படத்திலும் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

விஜயசாந்தி பாணியில் இந்த படத்தில் நயன்தாரா ஆக்ஷன் ஹீரோயினாக உருவெடுக்கப் போகிறாராம். இதுவரை செய்யாத கதாபாத்திரம் என்பதால் நயன்தாராவும் ஓகே சொல்லிவிட்டாராம். தற்போது ‘டோரா’, மீஞ்சூர் கோபி இயக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, தற்போது கேரளாவில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

அதன்பிறகு, சிவகார்த்திகேயன் ஜோடியாக மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் நயன்தாரா, இந்த படம் முடிந்தபிறகு சக்ரி டொலேட்டி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் நயன்தாரா முத்திரை பதிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.