அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8பில்லியன் ரூபா இழப்பு!

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் கடன்பெற்று அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழக்கப்படுவதாக சிறீலங்காவின் நிதியமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமைப்பதற்கு 175 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இதற்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கு வரிசெலுத்துவோர் வட்டியைச் செலுத்தி வருகின்றனர்.

வடிவமைத்து, கட்டியமைத்து பரிமாற்றம் செய்தல் என்ற அடிப்படையில் சீனா இத்துறைமுகத்தை அமைத்துக்கொடுத்தது.

இந்த துறைமுகத்தின் 80 வீத உரிமையை 1 பில்லியன் டொலருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதன்படி, 37.2 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ பெயர் பொறிக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தினால் ஆண்டொன்றுக்கு 5.9 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது.

இதனை அமைப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட 27.5 பில்லியன் ரூபா கடனைப் பயன்படுத்தியிருந்தது.