50 வருடங்கள் 200 படங்களுக்கு பிறகு ஜாக்கிசானுக்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது

ஹாலிவுட்டின் ஆக்சன் ஸ்டாரான ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசான் 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தனது அதிரடியான நடிப்பால் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஜாக்கிசானின் படங்களில் ‘போலீஸ் ஸ்டோரி’, ஹார்ட் ஆப் டிராகன், ரஷ் ஹவர், தி கராத்தே கிட் உள்ளிட்ட படங்கள் இவரின் அதிரடி காட்சிகளுக்காகவும், காமெடிக்காகவும் பிரபலமானவை. நடிகராக மட்டுமில்லாது 30-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியும் உள்ளார்.

நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடகர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய ஜாக்கிசான், 50 வருடங்களுக்கு மேல் சினிமாவில் வேரூன்றி இருந்தாலும் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது பெற்றதில்லை. 62 வயதான ஜாக்கிசானுக்கு திரையுலகில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஆஸ்கர் அமைப்பு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கி கவுரவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.