‘யோஹன்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்கள் தொடங்கப்படாததன் காரணம் என்ன என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, தொடங்கப்படாமல் இருக்கும் படங்கள் ‘யோஹன்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்குப் பூஜை எல்லாம் போடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது.
இவ்விரண்டு படங்களின் தொடங்கப்படாததுக்கு பின்னணி என்ன என்ற கேள்விக்கு, “’யோஹன்’ படத்தைப் பொறுத்தவரை மிகவும் ஆங்கில படப்பாணியில் இருக்கிறது. தமிழ் படத்துக்கான விஷயங்கள் இந்தப் படத்தில் இல்லை என்று எண்ணினார். அப்படத்தில் இருந்த சில விஷயங்கள் தற்போது நிறைய படங்கள் வந்துவிட்டது. ஆகையால் மறுபடியும் ’யோஹன்’ ஆக அப்படம் உருவாகுமா என தெரியவில்லை.
’துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறேன். கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்றேன். அப்படம் தொடங்கப்பட்ட சமயத்தில் சூர்யாவும் இந்தப் படம் மிகவும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்காக படம் பண்ணலாமே என்று எண்ணம் அவரிடம் இருந்தது. வழக்கமான பாணியில் இல்லாமல் Bourne Identity, Bourne Supermacy மாதிரி ஒரு படம் பண்ணலாமே என்று எண்ணினேன். என்னுடைய பார்வையில் அவர் அந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், தற்போது மீண்டும் சூர்யாவோடு ஒரு படம் பேசிவருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு, விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்