கிளிநொச்சியில் தொடர்ந்து கைது செய்யப்படும் இளைஞர்கள்!

யாழ் பல்கலைகழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25 ஆம் திகதி வடக்கில் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்  போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஏனையவா்களையும் கைது செய்யும்  வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக   கொண்டு சந்தேக நபர்கள்  கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கதவடைப்பு நாளன்று  ஏ9 வீதி மற்றும் கிளிநொச்சி புறநகர் பகுதிகளிலும்,  சந்திகளிலும் டயர்களை எரித்தவர்கள் மற்றும் கலகம் விளைவித்தவர்கள் என்பவா்களே கைது செய்யப்படுகின்றனர்.

இதேவேளை குறித்த தினத்தன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கலகத்தில் ஈடுப்பட்டு பொலீஸாரை தாக்கிய  நபா் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தோடு மேலும் பலா் தேடப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.