விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும்!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

வடமாகாண முதலமைச்சராக பதவி வகிக்கும் விக்னேஸ்வரன், இதுவரை தனது முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றவில்லை.

தனது இயலாமையை மூடி மறைப்பதற்கே அவர் தற்போது இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடனான விசாரணைகள் நடத்தப்படுவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமென  பிரித்தானிய அரசாங்கத்தின் பொதுநலவாய மற்றும் ஐ.நா. அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் பர்னோஸ் அனேலாவிடம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தக் குற்ற விசாரணைகள் குறித்த இந்தக் கருத்துகளும் இனங்களுக்கிடையிலான உறவுகளை குழப்பி மீண்டும் நாட்டில், இனவாதத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன.

முதலமைச்சர் பதவியை சரியாகப் பயன்படுத்த முடியாத, தோல்வியடைந்த முதலமை ச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

அவர் தன்னால் முதலமைச்சர் பதவியை வகிக்க முடியாது என்றால் பதவி விலக வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.