ஈராக்கில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிணறு: ஐ.எஸ் அகன்றாலும் மீட்சியில்லை

ஈராக்கின் al-Qayyarah  நகரை அரச படையினர் கைப்பற்றி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், எண்ணெய் கிணற்றில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர்.

எண்ணெய் கிணற்றில் பரவிவரும் தீயினால் அங்கு 400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதோடு, அடர்த்தியான கரும் புகை மண்டலமாக அப்பகுதிகள் காட்சியளிக்கின்றன. ஆபத்துக்கு மத்தியிலும் படையினர் தம் தளராத முயற்சியால் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பரவிவரும் தீயினால் பல ஆயிரக்கணக்கான பீப்பாய்கள் பெற்றோலியம் எரிந்து நாசமாகி வருவதாகக் கூறப்படுகின்றது.

ஆயினும் தொடரும் தீயணைப்பு பணிகளில் இதுவரை எவ்வித முன்னேற்றம் காணப்படாத போதிலும், சளைக்காமல் தீயணைப்பு படையினர் அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீரை வாரியிறைத்து தம் பணியை தொடர்கின்றனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி நாசமான இந்த நகரம், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பின்னரும் வள இழப்பை தொடர்ந்தும் சந்தித்து வருவது கவலைக்குரிய விடயமே.