ராமஜெயத்தை மனதில் எழுதுவது, சொல்வது எதில் பலன் அதிகம்?

இறைவனின் திருநாமத்தை எழுதுவதை விட மனதால் சொல்வது முழுமையான பலனைத் தரக்கூடியது. அதே நேரத்தில் சாதாரண மனிதர்களால் அவ்வளவு சீக்கிரமாக மனதை ஒருமுகப்படுத்த இயலாது. வெறுமனே வாயால் இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டு, உள்ளே மனது வேறொரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டிருந்தால் பலன் கிடைக்காது.

மனதை ஒருமுகப்படுத்துவதற்கான பயிற்சியாக முதலில் எழுதுகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் பாடங்களை பத்து முறை படிப்பதும், ஒருமுறை எழுதிப் பார்ப்பதும் ஒன்று என ஆசிரியர் சொல்லக் கேட்டிருப்போம். இது பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

உயர்கல்விக்குள் செல்லச் செல்ல கொஞ்சம், கொஞ்சமாக எழுத்துப் பயிற்சி குறைந்து பாடங்களை மனதாரப் புரிந்துகொள்வதன் மூலமே ஒருவனால் உயர்கல்வியில் முன்னேற்றம் காணமுடியும். அதேபோல இறைவனிடம் மனம் லயிப்பதற்கு முதல் முயற்சியில் எழுத்துப் பயிற்சியிலும், அதன் பின்னர் வாய்விட்டு சத்தமாக அவனது திருநாமத்தைச் சொல்லியும், அதனைத் தொடர்ந்து உதடுகள் மட்டும் அசைந்தும், இறுதியில் உதடுகளும் அசையாமல் மனதிற்குள்ளாக அவனது திருவுருவத்தை நிறுத்திக்கொண்டு அவனது திருநாமத்தை சொல்லும் திறனைப் பெறுவர்.

இவ்வாறு மனதிற்குள் சொல்வதன் மூலம் உடனடி பலனைக் காணமுடியும். முழுமனதுடன், முழுமையான ஈடுபாட்டுடன் மனதார இறைவனைத் துதிப்பவர்களுக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. ஒருமுறை நினைத்தாலே இறைவன் ஓடோடி வருவான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.