பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டு, வைத்தியசாலையில் பதட்டம்!

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு முயற்சித்த குழுவொன்றினால் பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் பதட்டம் நிலவியது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

துன்னாலைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் வாள்வெட்டுக்குள்ளாகிய மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை வெட்டுவதற்காக மூவர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் வைத்தியசாலைக்குள் புகுந்தபோது அங்கே வைத்திசாலைப் பாதுகாப்புக் காவல்துறையினர் ஒருவர் கடமையில் இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர்கள் உள்ளே செல்லாது வெளியே காத்திருந்தனர்.

இதனையறித்த வைத்திசாலை நிர்வாகம் நோயாளரின் பாதுகாப்புக் கருதி அனைத்து வாயில்களையும் அடைத்ததுடன், பருத்தித்துறை, நெல்லியடி காவல்துறையினரும் அவிடத்திற்கு வருகை தந்ததையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.