நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அக்கட்சியில் கடும் அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது. கட்சியின் மாநில கட்டமைப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட தொடர்ந்து இருந்து விலகி வருகின்றனர்.

கட்சி நிர்வாகிகள் விலகல் பற்றி எவ்வித கருத்தும் கூறாமல், அது அவரவர் விருப்பம் என்று சீமான் கூறி இருந்தார். அதே நேரத்தில் அவருக்கும், அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் கருத்து முரண் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

கருத்து முரண்கள் வலுத்ததாகவும் 2 நாட்கள் முன்பே நாம் தமிழரில் இருந்து காளியம்மாள் விலகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. ‘கட்சியில் இருப்பதற்கும், விலகி செல்வதற்கும் காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உண்டு’ என்று சீமான் கூறியிருந்தார்.

இது பற்றி தனது முடிவு என்ன என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று காளியம்மாள் தெரிவித்து இருந்தார். அதன்படி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அதோடு எதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதை விளக்கும் வகையில் முழு பக்க கடிதத்தையும் கட்சியின் நிர்வாகிகளுக்காக வெளியிட்டு உள்ளார்.

காளியம்மாள் அறிக்கை விவரம்;

இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும், நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன்.

இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன்.