இலங்கையில் வேகமெடுக்கும் டீனியா

நாட்டில் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பிரதான அறிகுறி அரிப்பு
Tinea நோயின் பிரதான அறிகுறி அரிப்பு ஆகும். மேலும், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறி காணப்படும். அதிகளவில் தோல் சுருங்கும் இடங்களிலும் வியர்வை அதிகளவில் சேரும் இடங்களிலும் அதிகளவில் இது ஏற்படும்.

அக்குள், பாதங்கள் மற்றும் தலையிலும் இத்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இது தொடர்பு மூலம் பரவுகிறது, மேலும் சக ஊழியர்களிடையே பரவக்கூடும் என்று அவர் கூறினார்.

இந்த நோயை சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், மற்றவர்களின் ஆடைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தளர்ந்த ஆடைகளை பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் இந்த சரும நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் விசேட வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.