முல்லைத்தீவிற்கு சிவப்பு எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்ப்பரவலைத் தடுக்க இன்று முதல் துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்திருப்பதனால் நீர் தேங்கி நுளம்புக் குடம்பிகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைகள்
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையினருடன் இணைந்து இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம், பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று காலை முதல் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சிறிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஏனைய நீர் தேங்கி நிற்ககூடிய பொருட்களை உடனடியாக அகற்றுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு அபாய நிலையினை கருத்திற்கொண்டு சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மீறப்படும் பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.