யாழில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது!

யாழ். வல்வெட்டித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேரே காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு
வல்வெட்டித்துறையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் திருட்டு போன சம்பவம் தொடர்பில் கடந்த 20ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு எஞ்சிய ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.