யாழில் வாகன உரிமையாளர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இன்று வரை நான்கிற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மாத்திரமே பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் அறிவுறுத்தல்
இதேவேளை நேற்று முன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று 20 இலட்சம் ரூபாய்விற்கு அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நெல்லியடி பகுதியில் பதிவாகியுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறு வாகனங்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.