இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்பும் பாகிஸ்தான்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டேரியல் மிச்சேல் 35 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். ஷகீன்ஷா அப்ரிடி 2 விக்கெட்டும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் பாபர் அசாம் 42 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி), முகமது ஹாரிஸ் 26 பந்தில் 30 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்) போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 2009-ல் கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி 3 முறை அரை இறுதியில் (2010, 2012, 2021) தோற்று இருந்தது.

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர் கொள்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் பாபர் அசாம் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த 3 போட்டிகளில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி.

சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கிறது. முதல் 6 ஓவரில் எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீரர்கள் இறுதியில் நன்றாக முடித்து வைத்தனர். முதல் 6 ஓவரில் அதிரடியாக ஆடுவது என்று திட்ட மிட்டோம். அதன்படி செயல்பட்டோம். இந்த வெற்றி தருணத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். ஆனால் அதே நேரத்தில் இறுதி போட்டியில் கவனம் செலுத்துவோம். இறுதி போட்டியில் எந்த அணியை எதிர் கொள்வோம் என்பதை இப்போதே சொல்ல இயலாது. எந்த அணி வந்தாலும் நாங்கள் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம். இறுதிப்போட்டி சவால்களை சமாளிக்க முயற்சி செய்வோம்.

பல கட்டங்களை கடந்து முன்னேறி உள்ளதால் இறுதி போட்டியில் அழுத்தம் இருக்கும்.கடந்த 3 ஆட்டத்தில் வெளிப்படுத்திய அதே திறமையை இறுதி போட்டியில் வெளிப்படுத்துவோம். இவ்வாறு பாபர் ஆசம் கூறியுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார். இதே போல பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.