ஏவுகணை சோதனை நடாத்தும் வடகொரியா!

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க – தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதனால் கடுப்பான வடகொரியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி வட கொரியா கடந்த புதன்கிழமை சோதித்தது.

அதில் ஓா் ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது. அதன் பிறகும் தனது 180 விமானங்களை அச்சுறுத்தும் வகையில் பறக்கச் செய்தும், நீண்ட தொலைவு ஏவுகணைகளை வீசியும் வட கொரியா பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்காவையும் தென் கொரியாவையும் தாக்குவதற்கான ஒத்திகையாகவே அந்த சோதனைகளை நடத்தியதாகக் கூறி வட கொரியா தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.