சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற சாரதி ஒருவர் கைது!

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் கால்நடைகளை லொறி ஒன்றில் ஏற்றி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் நேற்று(25) இரவு ஆறு கால்நடைகளை லொறி ஒன்றில் ஏற்றி சென்ற சாரதி மற்றும் உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கை

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குருநாகல் தம்பதெனியா பகுதிக்கு குறித்த கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்ட வேளையே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம்

கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இருந்தபோதிலும், இரவு வேளைகளில் கால்நடை கொண்டு செல்ல முடியாத காரணத்தினாலும், சுகாதார பரிசோதகரின் மருத்துவச் சான்றிதழ் இல்லாமை மற்றும் கால்நடை கொண்டு செல்லக்கூடிய வசதிகள் வாகனத்தில் ஏற்படுத்தி கொடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினாலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்