இலங்கை குறித்து பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள சீனா

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக சர்வதேச தளத்தில் சீனா எப்போதும் உதவும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின் ஊடாக அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டு மீறப்படுவதை சீனா எந்த சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது. நாங்கள் அந்த ஒத்துழைப்பை வழங்குவோம்.

மிதிக்கப்படும் இலங்கையின் சுதந்திரம்

எனினும் சில நாடுகள் அருகில் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன எனவும் சீனத் தூதுவர் கூறியுள்ளார்.

மனித உரிமை பற்றி உபதேசம் செய்யும் நாடுகள் என்ன செய்ய போகின்றன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன் போது இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக பேசப்படும்.

இலங்கை மக்கள் ஏற்கனவே கடும் பொருளாதார மற்றும் மனிதாபிமான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எப்போதும் மனித உரிமை சம்பந்தமாக உபதேசம் செய்யும் நாடுகள் உண்மையில் என்ன செய்ய போகின்றன என்பது தெரியாது எனவும் சீன தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.