ஆவணி மாத பிறப்பில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இன்று (புதன்கிழமை) ஆவணி மாதம் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர்.

இன்று அதிகாலையில் புனிதநீராடி விட்டு பாராயணம் செய்வது மிகுந்த பலன்கள் தரும். இன்று நடத்தப்படும் ஹோமங்களுக்கு சிறப்பான பலன் உண்டு. இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

குறிப்பாக நெய், ஒருசெம்பு பசும்பால், பழ வகைகள் ஆகியவற்றை தானமாக கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இந்த பரிகார தானங்களை இன்று காலையிலேயே கொடுக்க வேண்டும். தானம் செய்ய இயலாதவர்கள் சிறிது வாழைப்பழத்தை ஆலயங்களில் வைத்து வழிபட்டு விட்டு பிறகு அவற்றை ஆலய வாசலில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து விடலாம்.

இவ்வாறு பரிகாரங்கள், தானங்கள் செய்வதால் ஆவணி மாதம் முழுவதும் மனதில் நிம்மதி நிலவும். பண வரவும் அதிகரிக்கும். ஆவணி மாத தானத்துக்கு நீண்ட ஆயுள், நல்லவர்களுடன் சேருவது போன்ற பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.