பேருந்து நடத்துனரை காலால் உதைத்த பெண்!

நேற்று மாலை கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் நடத்துனரை உதைத்ததில் அவர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தில் கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறி, பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துநர் தெரிவித்தபோது, அவரை ​​கையால் தாக்கி உதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, பேருந்தில் இருந்த சிலர் அந்த பெண்ணை பிடித்து கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், 34 வயதுடைய அவர் பல வருடங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

பெண்ணும் நடத்துநரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண் மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படவுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.