அரிசி பதுக்கியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் இன்று(9) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமையவே இந்த கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியினை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அரிசி பதுக்கல்

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு அரிசி பதுக்கல் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் பழைய விலைக்கு அரிசிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிரடி செயல்

மேலும் மருதமுனை பகுதியில் குறித்த கடையில் “பொதுமக்களே உடனே விரையுங்கள், குறைந்த விலையில் அரிசியினை பெறுங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர்” என அப்பகுதியில் உள்ள அந்நூர் பள்ளிவாசலின் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகளவான மக்கள் வருகை தந்து அரிசினை கொள்வனவு செய்துள்ளனர்.

இதே வேளை இவ்வாறான அரிசி பதுக்கல் செயற்பாட்டினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.