நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அரசாங்க அதிபர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.மாவட்ட சமுர்த்தி பயனாளிகள்
யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1900 ரூபா, 3200 ரூபா, 4500 ரூபா பெறுமதியான நிவாரண உதவிக் கொடுப்பனவு தொகையாக மொத்தமாக 225,162,020 ரூபா மாதாந்தம் சமுர்த்தி வங்கிகளினால் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் மூன்று மாதங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவிக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
அதன் மேலதிகமாக நிதிக் கொடுப்பனவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3100 ரூபா, 3100 ரூபா, 3000 ரூபா என மொத்தமாக 239,277,600 ரூபா மேலதிகமாக சமுர்த்தி வங்கிகளுக்கு வைப்பிலிடப்பட்டு மே மாத கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.