ஒரே ஒரு காதல் ஜோடிக்காக இருளில் மூழ்கிய கிராமம்!

பாட்னா-பீஹாரில், காதலியை இருளில் ரகசியமாக சந்தித்து பேசுவதற்காக, கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்து வந்த, ‘கில்லாடி எலக்ட்ரீஷியனை’ கிராம மக்கள் திட்டம் போட்டு மடக்கி பிடித்தனர்.

அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு
பீஹாரின் புர்னியா மாவட்டத்தில், கணேஷ்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது.

பக்கத்து கிராமங்களில் இந்த பிரச்னை இல்லை.குறிப்பாக, மாலை இருள் சூழும் நேரத்தில், இரண்டு முதல் முன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்கதையானது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மின் துண்டிப்புக்கான காரணத்தை ஆராய துவங்கினர். அந்த கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

காதலியை சந்திக்க அரங்கேறிய சதி
இதையடுத்து அவரை ரகசியமாக பின் தொடர துவங்கினர்.அந்த எலக்ட்ரீஷியன் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார்.

அவரை கிராமத்து அரசு பள்ளிக்கூடத்தில் வைத்து இரவில் சந்திக்க செல்கையில், கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒரு நாள், அவர் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பள்ளிக்கூடத்தில் காதலியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, கிராமமே திரண்டு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

வகையாக சிக்கிய எலக்ட்ரீஷியனை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற நிலையில், பின்பு கிராம பஞ்சாயத்து தலைவரின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.