யாழ் பலாலியில் தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரைக்கு சென்று பார்வையிட்ட இராணுவத்தளபதி!

இன்றைய தினம் வலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணி ஒன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை தந்துள்ளார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று (08-05-2022) காலை வருகை தந்த இராணுவத் தளபதி, விகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆராய்ந்தார்.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டது.

விகாரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் இராணுவத் தளபதி இன்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.