இலங்கைக்கு கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரியை உயர்த்த வேண்டும் எனவும், நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் எனவும் இன்று குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, தீவிர கடன் சுமையில் சிக்கியுள்ளது. அத்துடன், உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சிக்கு மத்தியில் இறக்குமதிகளுக்குச் செலுத்த போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைக் கோரியுள்ளதென ரொய்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகள் குறித்து நாங்கள் மிகவும் நல்ல, பயனுள்ள, தொழில்நுட்ப விவாதங்களை நடத்தியுள்ளோம் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பதில் இயக்குனரான Anne-Marie Gulde-Wolf தெரிவித்துள்ளார்.

முக்கியமான செலவுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு வரி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடன் தொகையின் அளவு மற்றும் காலப்பகுதி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.