கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு ஏற்ற மிகவும் அட்டகாசமான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் – 1
புளி – 1 சிறிய அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

கத்தரிக்காய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

மிக்சர் ஜாரில் ஆறவைத்த பொருட்களை போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.