ரஷ்யப் படைகளை குழப்ப யுத்திகளை கையாளும் உக்ரைன்

உக்ரைனில் இருக்கும் வீதி வழிகாட்டி பலகைகளை அகற்றியும், டயர்கள், மரங்களை எரித்தும், தடுப்புகளை அமைத்து அனைத்து வழிகளிலும் ரஷ்யப் படைகளை தடுமாற வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை இன்று (27-02-2022) ஞாயிற்றுக்கிழமை 4 ஆவது நாளாக நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷியா தெரிவித்திருந்தது.

இருப்பினும், அந்த பேச்சுவார்த்தை உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் சாலை பராமரிப்பு நிறுவனம் ரஷ்ய தாக்குதலைத் தாமதப்படுத்தும் முயற்சியில், ரஷ்யப் படைகளை குழப்புவதற்காக அனைத்து வதீகளில் உள்ள வழிகாட்டி பலகைகளில் திருத்தங்களை செய்துவருகிறது.

வீதிகளில் உள்ள வழிகாட்டி பலகைகளை பயன்படுத்தி எளிதில் செல்ல வேண்டிய இடத்தின் வழியை அறிந்து கொள்ளமுடியும் என்பதால் அதில் உள்ள திசைகளை மாற்றியும், இடங்களின் பெயருக்கு பதிலாக ரஷ்யாவிற்கு திரும்பி செல் என்பன போன்ற வாசகங்களை எழுதி வருகின்றனர்.