அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை!

பனிபுயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

நியுயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனியை அகற்றும் வாகனங்கள் சாலைகளில் செல்வதை பார்க்க முடிந்தது.பல பகுதிகளில் வாகனங்கள் பனிமூடி காணப்பட்டன. லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு பெண் பனியில் உறைந்த நிலையில் தனது காரில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மன்ஹாட்டனுக்கு வடக்கே தீவு பகுதியில் 25 சென்டிமீட்டர் அளவிற்கு உறைபனி குவிந்துள்ளது. ரயில் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் இருந்து பனியை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனிப்புயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன