ஜேர்மனியில் வேலைவாய்ப்பினை பெற்றுகொள்ள விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஜேர்மனியில் பணியாற்ற விரும்பும் புலம்பெயர்வோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், ஜேர்மனி, ஆண்டொன்றிற்கு 400,000 வெளிநாட்டவர்களுக்கு பணி வழங்க காத்திருக்கிறதாம்!

ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, நாட்டின் மக்கள்தொகை சம நிலையின்மைப் பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், கொரோனா பரவலைத் தொடர்ந்து முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சந்திப்பதற்காகவும், ஆண்டொன்றிற்கு வெளிநாடுகளிலிருந்து தகுதி படைத்த பணியாளர்கள் 400,000 பேரை கவர விரும்புகிறதாம்.

திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை நம் நாட்டில் பெரிய பிரச்சினையாகியுள்ளதுடன், நமது பொருளாதாரத்தையும் அது பெருமளவில் பாதித்துவருகிறது என்கிறார் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள Free Democrats (FDP) கட்சியைச் சேர்ந்த Christian Duerr.

தொழிலாளர்களில் பலர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவரும் நிலையில், நவநாகரீக புலம்பெயர்தல் கொள்கை ஒன்றின் மூலம்தான் அதை ஈடுகட்டமுடியும் என்று கூறும் Duerr, அதனால், முடிந்தவரை, விரைவாக 400,000 வெளிநாட்டு திறன் மிகு தொழிலாளர்கள் என்னும் இலக்கை எட்டவேண்டும் என்கிறார்.

கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளான, புதிய சேன்ஸலர் Olaf Scholzஇன் Social Democrats கட்சியும், கிரீன்ஸ் கட்சியும் இந்த விடயத்தை ஆமோதிக்கின்றன என்பது புலம்பெயர்வோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்திதானே!