ஆப்கானிஸ்தானில் பசியால் உயிரிழக்கும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் பசியால் உயிரிழக்கும் மக்களை காப்பாற்ற எவ்வளவு நீதி வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முழுவதுமாக கைப்பற்றினர். இதனால், தற்போது அங்கு தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், இப்போது தாலிபான்கள் கையில் வந்துவிட்டதால், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது.

பொருளாதார ஆதரவை நிறுத்தியது. மேலும், உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது.

முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் பசியால் தவித்து வருகின்றனர்.

விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டியினால் தவித்து வருகின்றனர்.

மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.