கொரோனாவால் : சீனாவில் கட்டுப்பாடுகள் இரட்டிப்பு

சீன நாட்டில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொஞ்சம் தீவிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. இது ஜின்பிங் அரசுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.

உலகத்துக்கு கொரோனா பெருந்தொற்றை வாரி வழங்கி, உலக நாடுகளையெல்லாம் சொல்லவொணா துயரத்தில் ஆழ்த்தி உள்ள நாடு, சீனா. இந்த சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கிறது. இது பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள ஜின்பிங் அரசு தீவிரமாக செய்து வருகிறது. ஆனால் அதற்கு ஒரு பெருத்த சோதனை ஏற்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் சீன நாட்டில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொஞ்சம் தீவிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. இது ஜின்பிங் அரசுக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.

சீனாவில் தற்போது பரவுவது கொரோனாவா அல்லது உருமாறிய ஒமைக்ரானா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா இரட்டிப்பாக்குகிறது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் பல நகரங்களில் கணிசமான கொரோனா வெடிப்பை சீனா கையாண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அங்கு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், 1 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிற சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தின் தலைநகரமான ஷியான் நகரத்தில். உள்ளூர் அளவில் நேற்று 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நகரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் அமலுக்கு வந்துள்ளது.